அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதி அக்கா, தம்பி உடல் நசுங்கி பலி.. கதறி துடிக்கும் பெற்றோர்!

 

கர்நாடகாவில் அதிவேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் கல்லூரி மாணவியும், அவரது தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள தொட்டா நாகமங்கலா பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா (20). இவர், பெங்களூரு எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் படித்து வந்தார். இவரது தம்பி ரஞ்சன் (18). இன்று கல்லூரிக்கு பைக்கில் செல்ல மதுமிதா தயாரானார். அப்போது அவரை கல்லூரியில் விடுவதற்காக ரஞ்சன் உடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் கல்லூரியை நோக்கி மதுமிதா பைக்கை ஓட்டிச் சென்றார். அப்போது வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி மதுமிதா ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதனால் பைக்கில் இருந்து மதுமிதாவும், ரஞ்சனும் கீழே விழுந்தனர். அப்போது அவர்கள் இருவர் மீதும் லாரிச் சக்கரம் ஏறியது. 

இதில் தலை நசுங்கி மதுமிதாவும், ரஞ்சனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு எலக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் மதுமிதா மற்றும் ரஞ்சன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் சோதனை செய்தனர். அப்போது மதுமிதா, ரஞ்சன் இருவர் மீதும் வேகமாக மோதி லாரி விபத்து ஏற்படுத்திய காட்சி பதிவாகியிருந்தது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.