அதிர்ச்சி.. ஒரே சேலையை கட்டிக் கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய், மகள்!

 

கர்நாடகாவில் ஒரே சேலையைக் கட்டிக் கொண்டு தாயும், மகளும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டம் ஷஹாபாத் தாலுகாவில் உள்ள காகினா நதியில் இன்று காலை இரண்டு பெண்களின் உடல்கள் கரையோரம் ஒதுங்கி இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக சஹாபாத் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நதியில் இருந்த இரண்டு பெண்களின் உடல்களையும் மீட்டனர். அப்போது இரண்டு பெண்களும் ஒரே சேலையைக் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் அஃசல்பூர் தாலுகாவில் உள்ள நிலூர் கிராமத்தைச் சேர்ந்த சுமலதா (41) அவரது மகள் வர்ஷா (17) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களது உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்த தாயும், மகளும் தற்கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், மகளும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.