அதிகாலையில் அதிர்ச்சி.. காங்கிரஸ் மூத்த தலைவர் ஸ்ரீனிவாஸ் காலமானார்!

 

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.ஸ்ரீனிவாஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 76.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மூன்று முறை எம்எல்ஏவாகவும், 2009-ம் ஆண்டு ராஜசேகர் ரெட்டி அரசில் உயர் கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி அமைச்சராக ஸ்ரீனிவாஸ் பதவி வகித்துள்ளார். அத்துடன் 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தார்.

கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுத்த தலைவர்களில் இவரும் ஒருவர். ஆந்திராவின் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்த டி.ஸ்ரீனிவாஸ், சோனியா காந்தி உள்பட உயர் காங்கிரஸ் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். 

இந்த நிலையில், டி.ஸ்ரீனிவாஸ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார் என்று அவரது மகனும், நிஜாமாபாத் எம்பியுமான டி.அரவிந்த் தெரிவித்துள்ளார். 76 வயதான ஸ்ரீனிவாஸ் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

இவரது மறைவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு தெலுங்கானா போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் இரங்கல் தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி (கிராமப்புற நீர் வழங்கல் உட்பட), பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தன்சாரி அனசுயா சீதக்காவும் ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.