பாலியல் வன்கொடுமை..  துண்டு துண்டாக கிடந்த தலித் பெண்.. உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவம்!

 

உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுத் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாந்தா பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சுக்லா. இவர் அதே பகுதியில் மாவு மில் ஒன்றை நடத்தி வருகிறார். இங்குத் தினமும் காலை 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் கூட்டிப் பெருக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று வழக்கம்போல் மாவு மில்லை சுத்தம் செய்வதற்காகச் சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.

இதனால் அவரது மகள் தனது தாயை தேடி மாவு மில்லுக்கு சென்றுள்ளார். அங்குத் தாயை தேடி பார்த்தபோது, அலறல் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. பிறகு அங்கிருந்த அறை ஒன்றுக்குச் சென்று பார்த்தபோது துண்டு துண்டாகத் தாயின் சடலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் காவல் நிலையத்திற்குப் தகவல் தெரிவித்துள்ளார். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள ராஜ்குமார் சுக்லா, அவரது இரண்டு சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “பண்டாவில் ஒரு தலித் கற்பழிப்பு மற்றும் கொடூரமான கொலை பற்றிய செய்தி இதயத்தை உலுக்குகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெண்கள் பயமாகவும் கோபமாகவும் உள்ளனர். உத்தரப்பிரதேச பெண்கள் பாஜக அரசின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டனர்” என தெரிவித்துள்ளார்.