பாலியல் வன்கொடுமை.. வாலிபரை கொன்று எரித்த 3 சிறுவர்கள்.. டெல்லியில் பயங்கரம்!

 

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞரை 3 சிறுவர்கள் கொலை செய்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லி நிஜாமுதீன் பஸ்தி பகுதியில் கடந்த 21-ம் தேதி இரவு வழக்கத்துக்கு மாறாக சுற்றித் திரிந்த 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரித்து உள்ளனர். முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அவர்கள் தெரிவித்ததும், அவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

நிஜாமுதீன் பகுதியைச் சேர்ந்த அசாத் (25) என்பவனைக் கொலை செய்துவிட்டு வருவதாகத் அவர்கள் மூவரும் தெரிவித்து இருக்கின்றனர். இதைக் கேட்டு அதிர்ந்த போலீசார், அது தொடர்பாக விசாரித்தனர். அப்போது, “எங்களில் ஒருவனுக்கு அசாத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தான். பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். அவனைப் பழிவாங்க நினைத்தோம். அதனால், திட்டமிட்டு அவனை, கத்தியால் குத்தி, கற்களாலும், கட்டையாலும் அடித்துக் கொலை செய்தோம். அவனது உடலை, பஸ்தி பார்க் அருகில், காய்ந்த புல், துணிகளை வைத்து எரித்துவிட்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

உடனே, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதி எரிந்த நிலையில், அசாத் உடலைக் கைப்பற்றி உள்ளனர். மேலும், அந்த உடலைப் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கூறுகையில், “சிறுவர்கள் மூன்று பேரும் சேர்ந்துதான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் இந்த கொலையைச் செய்ததாகத் தெரிவித்திருக்கின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தில் சிறுவர்கள் ஆஜர் படுத்தப்படுவார்கள்” எனக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.