அரசு மருத்துவமனையில் சடலங்கள் விற்பனை.. ரூ 3.66 கோடி வருவாய் ஈட்டிய கேரள அரசு!

 

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாத சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் விற்றதன் மூலம் கேரள அரசு ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் உரிமை கோரப்படாத சடலங்களை 2008-ம் ஆண்டு முதல் அம்மாநில அரசு விற்பனை செய்து வருகிறது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. பரியாரம் மருத்துவக் கல்லூரி , திருச்சூர் மருத்துவக் கல்லூரி, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ஆகியவை அதிக எண்ணிக்கையில் சடலங்களை வழங்கியுள்ள அரசு மருத்துவமனைகள் ஆகும்.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கும் கேரள அரசு விற்றுள்ளது. இதில் மொத்தமாக 3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2008-ம் ஆண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்வி நோக்கங்களுக்காக வாரிசுகள் இல்லாமல் இறந்த உடல்களைப் பெற அனுமதிக்கும் சிறப்பு ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.