பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000.. ராகுல் காந்தி அதிரடி தேர்தல் வாக்குறுதி!

 

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் தோறும் 4 ஆயிரம் ரூபாய் பெற்று பயனடைவார்கள் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ல் எண்ணப்படும். தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் பூபால்பள்ளி மாவட்டம் காலேஷ்வரம் என்ற இடத்தில் நேற்று நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது, தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஊழல் செய்து கொள்ளையடித்து பெரும் சொத்து சேர்த்துள்ளார். அவரது ஊழலால் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனை சரி செய்வதற்காக காங்கிரஸ் கட்சி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் மக்களுக்கே வழங்கும் முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் பெற்று பயனடைவார்கள். அந்தத் தொகையை அவர்கள் சேமிக்க முடியும். 

இதன் முதற்கட்டமாக மாதம் ரூ. 2,500 பெண்களின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும். சிலிண்டர் மானிய விலையில் ரூ. 500-க்கு வழங்கப்படும். அடுத்ததாக, ரூ.1,000-க்கு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதுதான் மக்களின் அரசு. தெலுங்கானா முதல்வர் சநதிரசேகர் ராவ் 1 லட்சம் கோடி ஊழல் செய்து சொத்து சேர்த்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.