கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்... அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு

 

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சார்பில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் பட்ஜெட் தொகையை ரூ.11,600 கோடி நிர்ணயித்து திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அதனால் மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து  இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி  பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது புதுச்சேரி பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. அதன்படி தமிழ் வளர்ச்சியையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு புதுச்சேரியில் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டது. 

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்படும். நடப்பு ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் ப்ளஸ்-1 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம், 70 முதல் 79 வயது வரை உள்ள மீனவ பெண்களுக்கு உதவித்தொகை ரூ.3,500 ஆக உயர்த்தப்படும். மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. 1,330 கோடி ஒதுக்கப்படும். புதுவையில் வான்கோழிகள் வளர்க்க ஊக்குவிக்க 50 சதவீதம் மானியம், ஆட்டு பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். 

மேலும்  எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி ஒதுக்கீடு, ஆதி திராவிடர்களுக்கு ரூ.9 லட்சம் வரை 100 சதவீதம் மானியம், பிற வகுப்பினருக்கு ரூ.5 லட்சம் வரை 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.