பல முறை பலாத்காரம்.. காதலனை கைது செய்து எனக்கு மணம் முடித்து வையுங்கள்.. தர்ணாவில் இறங்கிய காதலி!

 

கர்நாடகாவில் காதலியை மிரட்டி பலாத்காரம் செய்த காதலனை கைது செய்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கோரி காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா கரட்டகி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சோந்தவர் ரவிராஜ். இவர் யூ-டியூப் பிரபலம் ஆவார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் 2020-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண் பி.யூ.சி. படித்து வந்தார். இதையடுத்து இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் காதலிக்க தொடங்கினர்.

இதுகுறித்து 2 பேரின் குடும்பங்களுக்கும் தெரியவந்தது. அப்போது காதலை கைவிடும்படி அவர்கள் கூறினர். ஆனால் காதல் ஜோடி அதை கண்டுகொள்ளவில்லை. அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது காதலியை அவர் பலாத்காரம் செய்தார். பின்னர் அதனை வீடியோ எடுத்தும் வைத்து கொண்டார். இதையடுத்து தனது காதலியை அவ்வப்போது மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதனால் இளம்பெண் கர்ப்பமடைந்தார். அதனை ரவிராஜ் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார். மேலும் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்டு சிகிச்சை அளித்து குடும்பத்தினர் காப்பாற்றி உள்ளனர். இதற்கிடையே தொடர்ந்து இளம்பெண்ணை மிரட்டி ரவிராஜ் பல முறை பலாத்காரம்  செய்து வந்துள்ளார். மேலும் திருமணத்திற்கும் மறுத்துள்ளார்.

இதையடுத்து இளம்பெண், கொப்பல் டவுன் காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அப்போது ரவிராஜை கைது செய்து தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி உள்ளார். இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.