இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு.. 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு செம் அறிவிப்பு!

 

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு குறித்த மாணவர்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று இது குறித்த உறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை எழுத அனுமதிக்கும் திட்டம் வரும் 2025 - 26 ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஒரு தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னொரு தரப்பினர் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எப்படி எழுதுவது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆனாலும் ஒன்றிய அரசின் இந்த திட்டத்தில் அனைவரும் இரண்டு முறையும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும், இரண்டு முறை எழுதினாலும் அதில் எதில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.