கடலுக்கடியில் ‛டைவ்’ அடித்து பூஜை செய்த பிரதமர் மோடி.. துவாரகா பற்றி நெகிழ்ச்சி

 

என் பல வருட ஆசை நிறைவேறியது என்று கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகாவில் வழிபட்டது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஏராளமான ஆன்மிக தலங்கள் உள்ளன. இதில் மிகவும் முக்கியமான ஒரு இடம் தான் துவாரகா. குஜராத் மாநிலத்தில் அரபிக்கடலில் அமைந்த நகரம் இதுவாகும். இந்த துவாரகா பகுதிக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் வலுவான ஒரு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அதாவது யது குல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகராக துவராகா இருந்ததாகவும், அதனை கிருஷ்ணன் தான் உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. மேலும் இந்த துவாரகா காலப்போக்கில் அரபிக்கடலுக்குள் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார். நேற்றும், இன்றும் குஜராத் உள்பட நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் உள்பட 5 இடங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைளை அவர் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று பிரதமர் மோடி துவாரகா நகர் மூழ்கியதாக கூறப்படும் இடத்துக்கு சென்று பூஜை செய்ய விரும்பினார்.

இதையடுத்து அவர் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் படகில் அரபிக்கடலுக்குள் பயணித்தார். இந்த வேளையில் பிரதமர் மோடி காவி உடை அணிந்து இருந்தார். கடவுள் கிருஷ்ணருக்கு மயிலிறகு விருப்பமான ஒன்று என்பதால் பிரதமர் மோடி தனது கையில் மயிலறகு கொண்டு சென்றார். அதன்பிறகு ஆழ்கடலில் பிரதமர் மோடி ‘ஸ்கூபா டைவிங்’ கருவிகளை உடலில் பொருத்தி கடலுக்குள் குதித்தார். பிற ஸ்கூபா டைவிங் வீரர்கள் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பாக உடன் சென்றனர்.

பிரதமர் மோடி மற்றும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஆழ்கடலின் தரைப்பகுதிக்குள் சென்றனர். அங்கு பிரதமர் மோடி தான் கொண்டு சென்ற மயிலறகை தரையில் வைத்து சிறப்பு பூஜை செய்தார். அதன்பிறகு தரைப்பகுதியை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி கடலில் இருந்து வெளியே வந்தார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.