திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம்.. விரைவில் புதிய திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு!

 

திருமணமாகாத நபர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

அரியானாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண கனவுடன் பெண் கிடைக்காமல் அம்மாநில இளைஞர்கள் தவித்து வருகின்றனர். இதற்கு காரணம் பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிகக் குறைந்த பாலின விகிதம் உள்ள மாநிலமாக அரியானா இருப்பது தான். இதனால் அரியானாவில் திருமண வயதுடைய ஆண்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலங்களில் மணப்பெண் தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, அரியானாவிற்குள் காலடி எடுத்து வைத்த வேற்று மாநில மருமகள்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இங்கு கடந்த 2001-ம் ஆண்டு ஆயிரம் ஆண்களுக்கு 756 பெண்கள் இருந்த நிலையில், 2011-ம் ஆண்டு பாலின விகிதம் 879 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, அரியானாவில் ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதியோர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது போல் திருமணமாகாத வர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க முடிவு அரியானா அரசு செய்திருக்கிறது.

இந்நிலையில், கர்னாலில் உள்ள கலம்புரா கிராமத்தில் நடந்த ஜன் சம்வாத் நிகழ்ச்சியில் முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணமாகாத நபர்களுக்கு விரைவில் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஒரு மாதத்திற்குள் இத்திட்டம் குறித்த அறிவிப்பை நிர்வாகம் வெளியிடும் என்றும் உறுதியளித்தார்.