இனி யுபிஐ மூலம் பணம் செலுத்தினாலும் கட்டணமா? ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்

 

இனி 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யுபிஐ மூலம் வணிக பரிவர்த்தனைகளுக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 1.1 சதவிகித கட்டணம் விதிக்கப்படும் என்ற ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பணமதிப்பிழப்பு செயல்படுத்தப்பட்டது முதலாக ஆன்லைன் பண பரிவர்த்தனையை அரசு ஊக்குவித்தது. அதன்படி பலரும் தங்கள் வங்கி கணக்குகளை யூபிஐ மீது இணைத்து கொண்டனர். அதன்மூலம் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட பல பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். 

சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. 

இந்நிலையில், ஆன்லைனில் யுபிஐ மூலம் ரூ.2,000 க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப் பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிய கடைகளில் ரூ.2,000க்கும் அதிகமான தொகை பணப்பரிமாற்றம் செய்தால், 1.1 சதவீதம் கட்டணமும், அரசு நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு, ரயில்வே பணப்பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்டை, ரியல் எஸ்டேட் போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதம் கட்டணமும், பெட்ரோல், டீசல் உபயோகத்திற்கான பணப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதம் கட்டணமும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயமானது ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட விலையை மதிப்பாய்வு செய்வதாக என்பிசிஐ (National payments corporation of india) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.