நடுவானில் செயலிழந்த பாராசூட்... ஆந்திராவை சேர்ந்த கடற்படை வீரர் பலி.. பயிற்சியின் போது விபரீதம்!!

 

பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது நடுவானில் பாராசூட் செயலிழந்ததால் ஆந்திராவை சேர்ந்த கடற்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தரக கோவிந்த் (31). இவர் விசாகபட்டினத்தில் கடற்படை கமாண்டோராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மேற்குவங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது நடுவானில் பாராசூட் திறக்காததால் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். பாங்குரா மாவட்டத்தில் உள்ள பார்ஜோராவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் வாயிலுக்கு வெளியே கோவிந்த் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

பாராசூட் அவரது தோள்களில் இணைக்கப்பட்டதை தெரிந்து கொண்ட போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த அதிகாரி சந்தரகா கோவிந்துக்கு இந்திய கடற்படையின் உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து பணியாளர்களும் அஞ்சலி செலுத்தினர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். அவரது உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.