பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டில் துன்பப்படுகிறார்! பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி பதிலடி!!

 

திமுகவினர் தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை  துன்புறுத்தி வருவதாக பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

பாராளுமன்ற திமுக தலைவரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி.யும் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

”வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர்.

ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று.

தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்துவருகிறார்.” என்று பதிவிட்டுள்ளார் கனிமொழி எம்.பி.

ஆளுநர் ஆர்.என்.ரவியை குறிப்பிட்டு பிரதமருக்கு கனிமொழி பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.