அரசு மருத்துவமனையில் தாயுடன் இருந்த ஒரு மாத குழந்தை... இழுத்து சென்று கொன்ற தெரு நாய்கள்... ராஜஸ்தானில் கொடூரம்!!

 

ராஜஸ்தானில் மருத்துவமனை வார்டில் தாயுடன் படுத்து இருந்த ஒரு மாத குழந்தையை தெரு நாய்கள் இழுத்து சென்று, கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் ஜவாய்பந்த் பகுதியில் வசித்து வருபவர் மகேந்திர குமார். இவர், உடல்நல குறைவு கரணமாக சிரோஹி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால், அவரது மனைவி ரேகா மற்றும் அந்த தம்பதியின் ஒரு மாத ஆண் குழந்தை உள்பட 3 குழந்தைகள் அந்த மருத்துவமனையின் வார்டிலேயே தங்கி உள்ளனர். நேற்று இரவு ஒன்றாக தூங்கி உள்ளனர். 

இந்த நிலையில், தாயுடன் வார்டில் படுத்து இருந்த ஒரு மாத குழந்தையை, திடீரென வார்டுக்குள் நேற்றிரவு நுழைந்த 3 தெரு நாய்கள் இழுத்து சென்று உள்ளன. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு மற்ற வார்டில் இருந்தவர்கள் எழுந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் குழந்தையை நாய்கள் இழுத்து செல்லும் காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து அவர்கள் தெரு நாய்களை விரட்ட முயற்சித்து உள்ளனர். அவற்றை அச்சுறுத்தியும் உள்ளனர். ஆனால், குழந்தையை நாய்கள் இழுத்து சென்று விட்டன. நாய்கள் தாக்கியதில் குழந்தையின் கால், முகம் மற்றும் கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தை உயிரிழந்து விட்டது. 

மருத்துவமனை வளாகத்தில் இரவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்தது நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் இடையே மனதளவில் பயம் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொத்வாலி காவல் நிலைய போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் இதுபோன்ற அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்து உள்ளது.