மனஉளைச்சலில் இருந்த நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. கர்நாடகாவில் அதிர்ச்சி!

 

கர்நாடகாவில் கல்லூரி மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் மகள் தியா மண்டோல் (20). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இதற்காக ஜாலஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லூரியின் விடுதியில் அவர் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களாக மாணவி, மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தியா மண்டோல் வழக்கம்போல் கல்லூரி முடிந்து விடுதிக்கு சென்றார். அப்போது விடுதி அறையில் தனியாக இருந்த தியா மண்டோல் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தோழிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகம் மற்றும் ஜாலஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மாணவி தியா மண்டோலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விடுதியில் தங்கி இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக கல்லூரி மாணவி கடந்த ஒரு வாரமாக மனமுடைந்து காணப்பட்டதும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தியா மண்டோலின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெங்களூருவுக்கு வந்த அவர்களிடம் மகளின் உடல் ஒப்படைக்கப்பட்டது. கல்லூரி மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.