கேரளாவில் மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. மக்களே கவனமா இருங்க..

 

கேரளாவில் காய்ச்சலால் இரண்டு ‘இயற்கைக்கு மாறான’ மரணங்கள் பதிவாகியதை அடுத்து அம்மாநில அரசு நிபா எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் இருந்ததால், இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தி உள்ளனர். அவர்கள் நிபா வைரசால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இறந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் ஆய்வுக்காக புனேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலையில் அதன் முடிவுகள் வெளியாகும். அதன்பிறகே, அவர்களின் மரணத்திற்கு காரணம் என்ன? என்பது உறுதி செய்யப்படும். இறந்தவர்களின் உறவினர்களில் ஒருவரும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று இரவு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவலில் கேரளாவுக்கு முக்கிய இடம் உண்டு. அங்கு மீண்டும் நிபா பலிகள் தலைகாட்டுவது, கேரளா மட்டுமன்றி அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் அச்சுறுத்தல் தரக்கூடியது.

இதற்கு முன்பு 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கோழிக்கோட்டில் 2018-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி முதல் முறையாக நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிபா வைரஸ் தொற்று, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இதேபோல், அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது நேரடி தொடர்பு மூலமாகவோ ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.