மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்..? பதற்றத்தில் கேரள மக்கள்!

 

கேரளாவில் மூணாறு அருகே உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி உள்ளதால், மீண்டும் நிபா வைரஸ் அச்சத்தில் மக்கள் உறைந்து உள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் கடந்த செப்டம்பர் மாதம் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் நிபா வைரல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர். வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதாகவும், வயநாட்டில் உள்ள வவ்வால்களை சோதனை செய்ததில், அவற்றுக்கு நிபா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனால் கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதித்தவர்கள் வந்தால் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.

வவ்வால்கள் சாப்பிட்ட பழத்தை யாரும் சாப்பிட வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சரும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மூணாறு எம்.சி.காலணியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி உள்ளதால், மீண்டும் நிபா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர். 

இதனையடுத்து, சுகாதாரத்துறையும், வனத்துறையும் சேர்ந்து உடனடியாக வவ்வால்களை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.