4வது மாடியில் இருந்து விழுந்து ஏர் ஹோஸ்டஸ் மர்ம மரணம்... காதலன் மீது தாய் பரபரப்பு புகார்!!

 

கர்நாடகாவில் காதலனை பார்க்க வந்த காதலி 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா திமான் (28). இவர் பிரபல விமான நிறுவனம் ஒன்றில் ஏர் ஹோஸ்டசாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் ஆதேஷ் என்ற நபருக்கும் 6 மாதங்களுக்கு முன் டேட்டிங் ஆப் ஒன்று மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. ஆதேஷ் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர். ஐடி ஊழியரான இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், அர்ச்சனா தனது காதலன் ஆதேஷை பார்க்க 4 நாள்களுக்கு முன்பு துபாயில் இருந்து கிளம்பி பெங்களூரு வந்துள்ளார். ஆதேஷ் பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் (மார்ச் 11) இவரும் மாலுக்கு சென்று படம் பார்த்துவிட்டு பாட்டி செய்து நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளனர்.

இவரும் மதுபோதையில் இருந்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவு வேளையில் அர்ச்சனா அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அர்ச்சனா கீழே விழுந்ததை காதலன் ஆதேஷ் போலீசாருக்கு தகவல் தர அவர்கள் அர்ச்சனாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அர்ச்சனா உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காதலன் ஆதேஷை போலீசார் கைது செய்த நிலையில், உயிரிழந்த அர்ச்சனாவின் தாயார் மகளின் மரணத்திற்கு காதலன் தான் காரணம் என புகார் தெரிவித்துள்ளார். ஆதேஷ் தான் அர்ச்சனாவை பிடித்து கீழே தள்ளியிருப்பார் என புகாரில் அவர் கூறியுள்ளார். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கிறனர். கைது செய்யப்பட்ட காதலன் ஆதேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.