தோட்டத்தில் காலிபிளவரைப் பறித்த தாய்.. ஆத்திரத்தில் மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மகன்!

 

ஒடிசாவில் 70 வயதான தாயார் தனது தோட்டத்தில் இருந்து காலிபிளவரை பறித்ததால் மகன் ஆத்திரத்தில் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி சாரதா (70). கணவரை இழந்த சாரதாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி சரசபசி கிராமத்திலேயே வசித்து வந்தனர். சாரதா தனது மூத்த மகன் கருணாவின் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே, மூத்த மகன் கருணா நோய் காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சாரதாவின் இளைய மகன் சஸ்துருகன் தனது மனைவியுடன் அதே கிராமத்தில் தனியே வசித்து வந்தார். சஸ்துருகனுக்கு கிராமத்தில் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார். இந்நிலையில், சாரதா நேற்று தனது இளைய மகன் சஸ்துருகனின் தோட்டத்தில் இருந்து சமைக்க காலிபிளவர் பறித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், ஆத்திரம் அடங்காத சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை வீட்டிற்கு அருகே இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், மாமியாரை காப்பாற்ற சென்ற மனைவியையும் சஸ்துருகன் தாக்கியுள்ளார்.

யாரேனும் தடுத்தால் அவர்களையும் தாக்குவேன் என்று ஊர் மக்களையும் மிரட்டியுள்ளார். இறுதியில் சஸ்துருகனிடமிருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் மீட்டனர். மகன் தாக்கியதில் படுகாயமடைந்த சாரதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.