குடித்துவிட்டு தினமும் டார்ச்சர்.. மகனை கோடாலியால் வெட்டி படுகொலை தாய்!

 

கேரளாவில் மகனை கோடாலியால் அடித்துக் கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். 

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம் பகுதியில் வசித்து வருபவர் சாவித்திரி (68). இவரது மகன் அனு தேவன் (45). கூலித் தொழில் செய்து வந்தார். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாயை அடித்து உதைப்பது வழக்கம். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அனு தேவனை தலையில் பலத்த காயத்துடன் சாவித்திரி கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக மருத்துவரிடம் கூறினார். சிகிச்சை பலனின்றி அனு தேவன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக முண்டக்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அனு தேவனை தாய் சாவித்திரி கோடாலியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. 

அவரிடம் போலீசார் விசாரித்தபோது மகனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தினமும் குடித்துவிட்டு துன்புறுத்தி வந்ததால் மகனை கொலை செய்ததாக அவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். விசாரணைக்குப் பின் சாவித்திரியை போலீசார் கைது செய்தனர்.