மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.. 2 குழந்தைகள் பரிதாப பலி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

 

கேரளாவில் மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், 2 ஆண் குழந்தைகள் பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் வெள்ளட்டாஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அகில். இவரது மனைவி சயனா. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். இதற்கிடையே கடன் தொல்லையால் இருக்கும் வீட்டை விற்பது தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சயானா 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உதவியுடன் 4 பேரையும் வெளியே கொண்டு வந்தனர். 

ஆனால், சிகிச்சை பலனின்றி அபிஜய் (7) மற்றும் ஆதிதேவ் (6) ஆகிய இரு ஆண் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய் மற்றும் பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.