குழந்தையை கிணற்றில் தள்ளிக் கொன்று தாய் தற்கொலை.. சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்க முடியாததால் நடந்த விபரீதம்

 

மகாராஷ்டிராவில் இளம்பெண் தனது இரு குழந்தைகளையும் சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்க முடியாத விரக்தியில், 5 வயது பெண் குழந்தையை கிணற்றில் தள்ளிக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டம் நிலங்கா தாலுகா மாலேகானை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (26). இவருக்கு ஒரு மகன், மகள் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெங்கட் ஹல்சேவுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. பாக்யஸ்ரீ ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகனையும், மகளையும் சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்க பாக்யஸ்ரீ விரும்பினார். ஆனால், அத்தகைய பள்ளி கட்டணம் இவர்களின் குடும்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்துள்ளது. இதன் காரணமாக பாக்யஸ்ரீ அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு பாக்யஸ்ரீயின் தாயார் இறந்துவிட்டார். இதன் காரணமாகவும் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில், தனது மகளுடன் மற்றொரு விவசாயிக்கு சொந்தமான கிணற்றுக்கு சென்ற பாக்யஸ்ரீ, அங்கிருந்து தனது கணவர் வெங்கட் ஹல்சேவுக்கு வீடியோ கால் செய்து, மகள் சமிக்சாவின் முகத்தை கடைசியாக பார்க்குமாறு கூறிவிட்டு, சிறுமியை கிணற்றில் தள்ளி அவரும் குதித்தார்.

தகவல் அறிந்த ஆரத் ஷஹாஜானி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்கள் உதவியுடன் பாக்யஸ்ரீ, சமிக்சா ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, பாக்யஸ்ரீ தனது மற்றொரு ஆண் குழந்தையையும் தன்னுடன் கிணற்றுக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அந்த குழந்தை தவறி விழுந்து தப்பிச் சென்றதால் உயிர் தப்பியது. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.