கர்நாடகாவில் வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்.. 2 பேர் பலி.. பீதியில் மக்கள்!

 

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் காரணமாக 2 பேர் பலியான சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குரங்க காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் 49 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் குரங்கு காய்ச்சல் காரணமாக அம்மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஷிவமொக்கா மாவட்டத்தின் ஹோசநகர் தாலுகாவில் ஜனவரி 8-ம் தேதி குரங்கு காய்ச்சல் காய்ச்சல் காரணமாக 18 வயது இளம்பெண் உயிரிழந்தார். 

இந்நிலையில், இன்று உடுப்பி மாவட்டத்தின் மணிப்பால் நகரில் 79 வயது மதிக்கத்தக்க முதியவர் குரங்கு காய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு குரங்கு காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. அதில் உத்தர கன்னடாவில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிவமோகா மற்றும் சிக்மங்களூரு மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகக் கர்நாடக அரசு ஐசிஎம்ஆரிடம் இந்த நோய்த் தொற்றைத் தடுக்க தடுப்பூசி கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நோய் கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து 1957-ம் ஆண்டு முதல் முதலாவதாக பரவியதாகக் கூறப்படுகிறது. அப்போதிலிருந்து ஆண்டு தோறும் சுமார் 500 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் குரங்கள் கடிப்பதன் மூலமோ அல்லது இறந்த குரங்களிடம் இருந்து மற்ற பூச்சிகளிடமும், அதன் மூலம் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.