மெட்ரோ ரயில் மருத்துவ மாணவர் மாரடைப்பால் பலி.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

 

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்த மருத்துவ மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மயங்க் கார்க் (25). இவர் டெல்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். தேர்வு எழுதுவதற்காக இவர், பல்லப்கரில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் ஐ.எஸ்.பி.டி. நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை பயணித்துக் கொண்டிருந்தார்.

ஜவஹர்லால் மெட்ரோ நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மயங்க் திடீரென்று ரயிலேயே மயங்கி சரிந்து விழுந்துள்ளார். ரயிலில் பயணித்த சக பயணி ஒருவர் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக மயங்க் கார்க் எந்தவித நோயாலும் பாதிக்கப்படவில்லை என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் லக்னெள பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல், நவராத்திரி பண்டிகையின்போது குஜராத்தில் மட்டும் 24 மணிநேரத்தில் கர்பா நடனமாடிய 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.