பப்ஜி விளையாட்டில் மலர்ந்த காதல்.. 4 குழந்தைகளுடன் நாடு கடந்து வந்த உ.பி. இளைஞருடன் குடியேறிய பாகிஸ்தான் பெண்..!

 

பப்ஜி விளையாட்டில் மலர்ந்த காதலால் பாகிஸ்தானை சேர்ந்த பெண் தனது 4 குழந்தைகளுடன் உத்தரபிரதேச இளைஞருடன் தங்கி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா நகரின் ரபுபுரா பகுதியைச் சேர்ந்தவர் சச்சின். இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, சச்சின் தனது செல்போனில் ஆன்லைன் பப்ஜி விளையாட்டு விளையாடியுள்ளார். அப்போது, சச்சினுக்கு பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீமா ஹைதருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன.

பப்ஜி விளையாட்டின் போது சச்சினும், சீமாவும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் தனது காதலனான சச்சினை பார்க்க வேண்டும் என எண்ணிய சீமா தனது கணவரை கைவிட்டு 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டுள்ளார்.

சீமா 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் சென்றுள்ளார். பின்னர் நேபாளத்தில் இருந்து கடந்த மாதம் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். பின்னர் பேருந்து மூலம் உத்தரபிரதேசத்திற்கு வந்த சீமா நெய்டாவின் ரபுபுராவில் வசித்து வரும் தனது காதலன் சச்சினை சந்தித்தார்.

பின்னர், சச்சினும் சீமாவும் 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர். இதனிடையே, ரபுபுரா பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் பெண் தங்கி இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் உத்தர பிரதேச போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சீமா ஹைதர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும் அவர் தனது 4 குழந்தைகளுடன் பப்ஜி ஆன்லைன் காதலன் சச்சினை தேடி இந்தியாவுக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளை போலீசார் கைது செய்தனர்.