நட்பாக பழகலாம்.. சிவசேனா நிர்வாகியின் மகனை சுட்டுக் கொன்று நண்பன் தற்கொலை.. ஃபேஸ்புக் நேரலையில் நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ!

 

மகாராஷ்டிராவில் பகையை மறந்து நட்பாக பழகலாம் எனக்கூறி சிவசேனா நிர்வாகியின் மகனை சுட்டுக் கொன்று நண்பன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் கோசல்கர். இவர் சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவரது மகன் அபிஷேக். இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவருக்கும், மோரிஸ் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தங்களது முன்பகையை மறந்து, ஒருவருக்கு ஒருவர் நட்பாக பழகுவோம் என்று இருவரும் சமாதானம் அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று அபிசேக் மும்பை தகிசர் பகுதியில் உள்ள எம்.எச்.பி. காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஃபேஸ்புக் நேரலை விவாதத்தில் சமூக ஆர்வலரான மோரிஸ் என்பவருடன் கலந்து கொண்டார். ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டனர்.

நேரலை முடிந்து அவர் புறப்பட்ட சமயத்தில் மோரிஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிசேக்கை சரமாரியாக சுட்டார். இதில் காயம் அடைந்த அபிசேக் உயிருக்கு போராடினார். அடுத்த சில நிமிடங்களில் மோரிசும் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.