12 ஆண்டுகளாக இப்படிதான் இருக்கேன்.. 3-வது மனைவியை கொடுமை செய்த கொடூர கணவர்!

 

கர்நாடகாவில் 3-வது மனைவி தன்னை விட்டு ஓடி விடுவார் என்ற பயத்தில் அவரை கணவர் பல மாதங்களாக சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே கோட் தாலுகா மடகேர் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னையா. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சுமா என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், சன்னையாவுக்கு தனது மனைவி, தன்னை விட்டு ஓடிவிடுவாரோ என்ற அச்சம் உள்ளுக்குள் இருந்துகொண்டே இருந்தது.

இதனால் கடந்த பல வாரங்களாக குழந்தைகள் பள்ளிக்கு சென்றதும், தான் வேலைக்கு புறப்படுவதற்கு முன்பாக சுமாவை, வீட்டின் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு செல்வதை சன்னையா வாடிக்கையாக கொண்டிருந்தார்.

மேலும், பள்ளியில் இருந்து மாலையில் குழந்தைகள் திரும்பி வந்தால் கூட, சன்னையா வரும் வரை வெளியிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு சுமா, ஜன்னல் வழியாக உணவுகளை கொடுத்துள்ளார். இதனிடையே சுமாவின் அவலநிலை குறித்து அறிந்த சந்த்வானா கேந்திரா போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று சுமாவை மீட்டனர்.

அதன் பின்னர், சுமா தனது கணவர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை என்றும், தான் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து சுமாவுக்கு போலீசார் ஆலோசனை கூறி அனுப்பிவைத்தனர். அதேசமயம், சன்னையாவை கடுமையாக எச்சரித்தும் அனுப்பினர். ற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து, அந்த இரு பெண்களையும் அந்த நபர் விவாகரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.