தோழிகளுடன் போதை பார்ட்டி.. 33வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி!

 

கர்நாடாகவில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான இளைஞர் மது போதையில் 33வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் தீபென்ஷா சர்மா. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் வல்லுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் நேற்று இரவு பெங்களூருவில் அடுத்த கொடிகேஹல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு பெண் தோழிகள் மற்றும் ஆண் நண்பருடன் இணைந்து பார்ட்டி செய்துள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் 33வது மாடியில் இருந்து தீபென்ஷா தவறி விழுந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கே.ஆர்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர், திபென்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து திபென்ஷா தவறி விழுந்தாரா? அல்லது தள்ளிவிடப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.