மத்தியப் பிரதேசத்தில் அரசுப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் FAIL..  பெற்றோர்கள் அதிர்ச்சி!

 

மத்திய பிரதேசத்தில் அரசு பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தேர்ச்சி பெறாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகளை கடந்த புதன்கிழமை மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 58.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 12-ம் வகுப்பு தேர்வில் 64.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 85 மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். கடந்த புதன்கிழமை பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அந்தப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறவில்லை.

அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 75 பேரில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த செய்தி பெற்றோர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய பிரதேச மாநில பள்ளி கல்வித்துறை அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஆசிரியர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக காமர்ஸ் பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியரே இல்லை என்றும் அந்த மாணவர்களுக்கு கணித பாடப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் தான் பாடம் எடுத்ததாகவும் அதனால் தான் அனைத்து மாணவர்களும் பெயில் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.