ஐஐடியில் விடுதியில் மாணவர் திடீர் மரணம்.. அசாமில் அதிர்ச்சி சம்பவம்

 

அசாமில் உள்ள ஐஐடியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஐஐடி செயல்பட்டு வருகிறது. இந்த ஐஐடியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அந்த மாணவர், தனது விடுதி அறையில் இறந்து கிடந்துள்ளார். அந்த அறையில் தங்கியிருந்த மற்றொரு மாணவர் வெளியில் சென்றுவிட்டார். இதைப் பார்த்த பாதுகாவலர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மாணவர் கைப்பட எழுதிய குறிப்பையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மாணவனின் மரணம் குறித்து பீகாரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி நிறுவனத்தின் அலட்சியத்தால் மாணவர் மரணம் அடைந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மன அழுத்தம் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

மாணவரின் மரணம் குறித்து ஐஐடி சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், மாணவரின் தனியுரிமை மற்றும் இந்த சம்பவத்தின் உணர்வுபூர்வமான தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்று ஐஐடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.