கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன்.. ஐடி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு

 

கர்நாடகாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் சுசுலஹகலி தாலுகா பசப்புரா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா (22). ஐடி ஊழியரான இவருக்கும், சுனில் என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து பூஜா மற்றும் சுனில் தம்பதி பெங்களூரு ஜாலஹள்ளி அருகே கங்கம்மனகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

திருமணத்தின்போது சுனிலுக்கு வரதட்சணை கொடுக்கப்பட்டு இருந்தது. எனினும் கடந்த சில மாதங்களாக சுனில் தனது மனைவி பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். ஆனால் பூஜா கூடுதல் வரதட்சணை கொடுக்க மறுத்து வந்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையே பூஜாவை, சுனிலின் சகோதரி மற்றும் குடும்பத்தினரும் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் பூஜா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதுகுறித்து பூஜா தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இந்த நிலையில் நேற்று பூஜா வீட்டில் உள்ள தனது அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலின் பேரில் கங்கம்மனகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வரதட்சணை கொடுமையால் பூஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சுனில் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.