மனைவியின் தலையை துண்டித்த கொடூர கணவர்.. டீ போட்டுத்தர தாமதமானதால் விபரீதம்!

 

உத்தர பிரதேசத்தில் டீ போட்டுத்தர கொஞ்சம் தாமதமானதால் மனைவியின் தலையை கணவன் துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர் ஜாதவ் (52). கூலித் தொழிலாளியான இவர், தன் மனைவி சுந்தரி (50) மற்றும் ஒரு மகன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். தரம்வீர் ஜாதவ் குடிக்கு அடிமையானதாகவும், இதனால் குடும்பத்தில் பணப் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

அதே போல், கடந்த திங்கட்கிழமை அன்றும் குடிபோதையில் வந்த தரம்வீர் ஜாதவுக்கும் அவரது மனைவி சுந்தரிக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் கடுமையான வார்த்தைகளை கொட்டி சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இந்த ஆத்திரத்தில் மறுநாள் காலை கொஞ்சம் தாமதமாக எழுந்த சுந்தரி, தரம்வீர் ஜாதவுக்கு லேட்டாக டீ போட்டுக்கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தரம்வீர் ஜாதவ், சமையலறைக்கு சென்று தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கிருந்த வாள் போன்ற கூர்மையான ஆயுதத்தை எடுத்து, மனைவியின் பின்னால் நின்றபடி கழுத்தில் வெட்டினார்.

தலை வெட்டப்பட்டு சுந்தரி தரையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து ஓடி வந்த குழந்தைகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கரும்புக்காட்டுக்குள் சென்று தப்பியோடிய தரம்வீரை தேடி பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து தரம்வீர் மகன் கூறுகையில், என் தந்தைக்கு அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. நாள்தோறும் ஆறு முதல் எட்டு முறை அவர் தேநீர் குடிப்பார். அன்றும் அவர் தேநீர் கேட்டபோது, அதை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் என் தாயை அவர் வெட்டி கொன்று விட்டார் என்று தெரிவித்தார். கைது செய்யப்பட்ட தரம்வீரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.