விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.. கிசான் சம்மன் நிதியின் அடுத்த தவணை குறித்த அப்டேட்!!

 

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான14வது தவணைப் பணத்தை செலுத்த ஒன்றிய அரசு தயாராகி வருகிறது.

ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தின் மூலம் நேரடி நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், நாட்டின் தகுதியுள்ள மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் முதல் தவணையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இரண்டாவது தவணையும், டிசம்பர் முதல் மார்ச் மாதத்திற்குள் மூன்றாவது தவணையும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் இதுவரை 13 தவணைகளாக தலா 26  ஆயிரம் ரூபாயை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், 14வது தவணை தொகையை வழங்க ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 14வது தவணை மே 26 முதல் 31ம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இல்லையென்றால் ஜூன் மாதத்தில் இந்த பணத்தை விவசாயிகள் பெறலாம்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் 13வது தவணைப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கடந்த பிப்ரவரி மாதம் டெபாசிட் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியானவர்களின் விவரங்களை PM Kisan இணையதளம் வழியாக விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெறுகின்றனர். 13 தவணைகளில் இதுவரை 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு சுமார் 2 லட்சம் கோடி வரை டெபாசிட் செய்துள்ளது.

இப்போது அடுத்த தவணையாக சுமார் 16 ஆயிரம் கோடியை டெபாசிட் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. கடுமையான நிதிச்சுமைகளுக்கு மத்தியிலும் மத்திய அரசு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் கீழ் விவசாயிகள் விண்ணப்பிக்க விரும்பினால், பிரதம மந்திரி கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.