பெரும் சோகம்.. சாலையோர உணவகத்திற்குள் புகுந்த லாரி.. 4 பேர் உடல் நசுங்கி பலி!

 

உத்தரபிரதேசத்தில் சாலையோர உணவகத்தில் லாரி புகுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் இடாவாஹ் மாவட்டம் இஹ்டில் பகுதியில் இடாவாஹ் - கான்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த உணவகத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உணவகத்தின் உரிமையாளர் குல்தீப் குமாரும் அங்கு இருந்தார்.

அப்போது, ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லி நோக்கி சென்ற லாரி ஒன்று, இடாவாஹ் - கான்பூர் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சாலையோர உணவகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உணவக உரிமையாளர் குல்தீப் குமார், வாடிக்கையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்து நேர்ந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் அவ்னிஷ் ராய் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பார் சஞ்சய் குமார் வெர்மா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, டீக்கடைக்குள் புகுந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனிடையே, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.