மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்.. அகவிலைப்படி மீண்டும் உயர வாய்ப்பு!

 

ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ள நிலையில் இந்த ஆண்டு ஜூலையில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) 4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மார்ச் 24, 2023 அன்று அறிவித்தார்.

இந்த புதிய அறிவிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அளவு 42 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் மூலம் சுமார் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

இந்த நிலையில் அடுத்த ஊதிய உயர்வுக்காக மத்திய அரசு பணியாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு ஜூலை 2023-ல் வெளியாகும். அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் தொகையாகும். அதிகரித்து வரும் விலைவாசி சூழலுக்கு ஏற்ப இந்த தொகை வழங்கப்படுகிறது. 

டிஏ என்பது ஊழியரின் ‘அடிப்படை ஊதியத்தின்’ ஒரு நிலையான சதவீதமாக கணக்கிடப்படுகிறது. இந்த விகிதம் ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படும். பொதுவாக டிஏ நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி கணக்கிடப்படுகிறது.

டிஏ விகிதங்கள் அதிகரிப்பு செலவின அடிப்படையில் அரசிற்கு சுமையாக இருந்தாலும், இந்த முடிவு பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில், அரசு பணியாளர்கள் ஜூலை மாதத்தில் மேலும் ஒரு ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்.