ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் தும்கூருவைச் சேர்ந்தவர் எம்.ஜி. நயன் (27). இவர் கண்ணூர் - பெங்களூரு - மங்களூரு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். இந்த ரயில் மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப் பாலத்தை இன்று காலை கடந்து கொண்டிருந்தபோது நயன் திடீரென ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பன்ட்வால் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உள்ளூர் நீச்சல் வீரர்கள் மூலம் நயனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ரயிலில் நயன் வைத்திருந்த உடைமைகளை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் அவரது ஆதார் கார்டு இருந்தது. அதைவைத்து, நயனின் முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்த போலீசார், உடனடியாக நயனின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து எம்.ஜி.நயன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.