லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி மருத்துவர் உள்பட 4 பேர் பலி.. நோயாளியை அழைத்து சென்றபோது பரிதாபம்!

 

மகாராஷ்டிராவில் நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதிய பயங்கர விபத்தில் மருத்துவர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் இருந்து அகமதுநகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் இரவு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டது. நோயாளிக்கு உடனடியாக மேல் சிகிச்சை தேவைபட்டதால் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. ஆம்புலன்சில் நோயாளியுடன் மருத்துவர், செவிலியர், ஓட்டுநர் உள்பட 4 பேர் இருந்தனர். 

இரவு 9.30 மணியளவில் ஆம்புலன்ஸ் தமன்காவ் - அகமதுநகர் ரோட்டில் அம்போரா பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென இடது புறமாக திரும்பியது. இதன் காரணமாக கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வேகமாக வந்த ஆம்புலன்ஸ், லாரி மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆம்புலன்ஸ் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடி கொண்டு இருந்த மருத்துவர் மற்றும் மேலும் ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

பலியானவர்கள் டாக்டர் ராஜேஸ் ஜின்சுர்கே (35), ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாரத் லோகன்டே (35) மற்றும் மனோஜ், பப்பு ஆகியோர் என தெரியவந்தது. நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி மருத்துவர் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.