இந்தியாவில் முதல்முறை.. பிறந்து 4 நாட்களே ஆன சிசுவின் உடலுறுப்புகள் தானம்.!

 

குஜராத்தில் பிறந்து 4 நாட்களே ஆன சிசு, மூளைச்சாவடைந்த நிலையில், அதன் உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் ஹர்ஷ்பாய். இவரது மனைவி சேத்தன்பென் சங்கானி. இந்த தம்பதிக்கு கடந்த 13-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்தது முதல் எந்த அசைவையும் காட்டவில்லை. அழுகையும் இல்லை. எனவே உடனடியாக அக்குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு சிகிச்சைகள் அளித்தும், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், குழந்தை மூளைச்சாவடைந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவர்கள் குழந்தையின் இறப்பு பற்றி எடுத்துக் கூறினர்.,இதைக்கேட்ட பெற்றோர், கதறி அழுது துடித்தனர். குழந்தையின் உடலுறுப்புகள் மூலம் பல குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கலாம் என்று அவர்களுக்கு உணர்த்திய மருத்துவர்கள், குழந்தையின் உறுப்புகளை தானமாக அளிக்க கோரிக்கை விடுத்தனர்.

அதன் பின்னர் பெற்றோர்கள் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.  இந்த செயல் பல குழந்தைகளின் பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் என்று அவர்கள் தங்களது குழந்தையின் உடலுறுப்புகளை தானமளிக்க ஒப்புக்கொண்டனர்.

பல்வேறு மருத்துவமனைகளில் உடலுறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பெற்று வரும் பல குழந்தைகளுக்கு இதன் மூலம் மறுவாழ்வு கிடைக்கவிருக்கிறது. அந்த குழந்தையிடமிருந்து, இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கருவிழிகள், கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்ட மிக முக்கிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதில், சிறுநீரகங்கள் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 மாதக் குழந்தைக்கும்,  புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 மாதக் குழந்தைக்கு கல்லீரலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதலில், அந்தக் குழந்தையின் பாட்டிதான், இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்து குடும்பத்தில் அனைவரையும் ஒப்புக்கொள்ள வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டிலேயே மிகச் சிறிய குழந்தையிடமிருந்து உடலுறுப்புகள் தானம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.