தந்தை தற்கொலை.. செல்போனில் வீடியோ எடுத்த 4 வயது மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

 

ஆந்திராவில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாநிலம் சிலக்கலபவி பகுதியில் வசித்து வந்தவர் ஷேக் ஜமால் வாலி (36). இவர் டிப்பர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அரிபூன். இவர் குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனைவி குவைத்தில் வேலை செய்வதால் தனது குழந்தைகளுடன் ஷேக் ஜமால் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி அதிகாலையில் ஷேக் ஜமால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனை அவரது 4 வயது மகன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து உயிரிழந்தவரின் தங்கை ஷாபனா போலீசாருக்கு அளித்த புகாருக்கு பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து உயிரிழந்தவரின் தங்கை ஷாபனா கூறுகையில், ஒரு வருடத்திற்கு முன்பு தனது தந்தை மதார் சாஹேப் இறந்த பிறகு ஜமால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறினார். புதன்கிழமை, ஜமால் தனது 4 வயது மகனை அவர்களின் வீட்டின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று, அவர் தற்கொலை செய்து கொள்வதை வீடியோ எடுக்கச் சொன்னார்.

இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்து செல்ல, இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.