விஷம் கொடுத்து 2 மகள்களைக் கொன்று விட்டு ரயில் முன் பாய்ந்த தந்தை.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

கேரளாவில் தனது இரண்டு மகள்களை கொன்றுவிட்டு தந்தை ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு பய்யோலி பகுதியைச் சேர்ந்த சுமேஷ். இவருக்கு கோபிகா (15), ஜோதிகா (12) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மனைவி இறந்த பின்பு தனது குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாமல் சுமேஷ் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுமேஷின் உடல் அவரது வீட்டருகே இருந்த ரயில்வே தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் யார் என்பது குறித்து விசாரித்த போது, அந்த நபர், பய்யோலி பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பது தெரியவந்தது.

அதன் பின் அவரது வீட்டுக்கு போலீசார் வந்து பார்த்த போது, வீட்டில் அவரது இரண்டு மகள்களின் சடலங்கள் இருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இரு சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனது இருமகள்களுக்கும் நேற்று காலை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பின்னர் சுமேஷும் ரயில் முன்பு பாய்ந்து, தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. எனினும் தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, சுமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.