‘ட்ரிபிள் ரைடிங்’ தடையிலிருந்து விதிவிலக்கு.. ஒன்றிய அரசை அணுக கேரள அரசு முடிவு!

 

இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்கும் வகையில் குழந்தையுடன் செல்லும் பெற்றோருக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசை கேரள அரசு அணுக உள்ளது.

கேரள மாநிலத்தில் முக்கிய பகுதிகள் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து நடைமுறை அமலில் உள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்லும் ‘ட்ரிபிள் ரைடிங்’ குற்றத்துக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இருசக்கர வாகனங்களில் குழந்தையுடன் பெற்றோர் செல்ல அனுமதிக்கும் வகையில் ‘ட்ரிபிள் ரைடிங்’ தடையிலிருந்து அவர்களுக்கு விதிவிலக்கு கோரி ஒன்றிய அரசை அணுகுவது குறித்து கேரள போக்குவரத்து துறை பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனிராஜு கூறுகையில், “இந்த விவகாரத்தில் விதிகளில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக கேரள அரசு ஆராயும். இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசிடம் எடுத்துரைக்க அதிகாரிகளின் கூட்டம் விரைவில் கூட்டப்படும். புதிய போக்குவரத்து நடைமுறையின் கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட பிறகு நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன” என்று தெரிவித்தார்.