மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. மனைவி, இரு குழந்தைகளையும் கொன்று எரித்த கணவர்.. ஜார்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்!!

 

ஜார்கண்ட்டில் மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரையும் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்து நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் தாகூர் காவ் பகுதியில் வசித்து வருபவர் விஜேந்திரா ராம். இவருக்கும் மம்தா தேவி என்று பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளுக்கு  முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதிக்கு ஆர்யன் குமார் மற்றும் யஷ் ராஜ் என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இதற்கிடையே கணவர் விஜேந்திரா மற்றும் மனைவி இடையே நீண்ட நாள்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில், மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு கணவர் விஜேந்திரா தொடர்ந்து துன்புறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனது குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவி மம்தாவை தீர்த்து கட்ட சதி திட்டமும் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த புதன்கிழமை அன்று தனது வீட்டில் வைத்தே மனைவியை விஜேந்திரா கொலை செய்துள்ளார். 

இந்த கொலையை விஜேந்திராவின் குழந்தைகள் இருவரும் பார்த்து அழத் தொடங்கி உள்ளனர். இதனால் நாம் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் தனது இரு மகன்களையும் கொலை செய்த விஜேந்திரா, மூவரின் உடலையும் காட்டுப் பகுதிக்குள் எடுத்து சென்று தீவைத்து எரித்துள்ளார்.

அடுத்த நாள் காலை அப்பகுதிக்கு வந்த உள்ளூர் மக்கள் கருகிய நிலையில் இருந்த மூன்று உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மை அம்பலமானது. குற்ற சம்பவத்தின் முக்கிய நபரான விஜேந்திரா, அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.