பேச மாட்டியா செல்லம்.. காதலியை வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்.. டெல்லியில் பயங்கரம்!

 

டெல்லியில் பேச மறுத்த இளம்பெண்ணை 13 முறை கத்தியால் காதலன் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி லாடோ சாராய் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் பிராக்சி. இவர் கவுரவ் பால் என்ற இளைஞருடன் கடந்த 2 வருடங்களாக பழகி வந்ததாக தெரிகிறது. இந்த விஷயம் பிராக்சியின் பெற்றோருக்கு தெரிந்ததும், மகளை கண்டித்துள்ளார்கள். இனிமேல், கவுரவ் பாலுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்றும் அவருடனான தொடர்பை உடனடியாக துண்டிக்குமாறும் சொல்லி உள்ளார்கள். இதனால், பிராக்சியும், கவுரவ் பாலுடன் பேசுவதை தவிர்க்க துவங்கி உள்ளார்.

ஒவ்வொருமுறை பிராக்சியிடம் பேச முயன்றபோதெல்லாம், அவர் தன்னை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியதால் கவுரவ் பாலுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்காக பிராக்சி முயற்சி செய்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம், இந்த கம்பெனியில் இன்டர்வியூ நடப்பதாக அறிவிப்பு வெளியாகவும், அதில் கலந்து கொள்வதற்காக கால்டாக்சியில் ஏறி சென்றுள்ளார்.

அப்போது திடீரென அவரை வழிமறித்த கவுரவ், நடுவழியிலேயே தகராறு செய்துள்ளார். தன்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? என்று கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இதில் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த கவுரவ் பால், மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, பிராக்சியை சரமாரிய குத்திவிட்டார். மொத்தம் 13 இடங்களில் கத்தியால் குத்தியதில், பிராக்சி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். 

பட்டப்பகலிலேயே, நடுரோட்டில் பெண்ணை கத்தியால் குத்துவதை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கத்தி கூச்சலிட்டார்கள். உடனே கவுரவ் அங்கிருந்து தப்ப முயன்றபோது, அவரை பொதுமக்களே சுற்றிவளைத்து பிடித்துவிட்டனர். பிறகு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிராக்சியை, மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் கவுரவையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். மிகவும் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்க பிராக்சிக்கு தீவிர சிகிச்சை நடந்தது. இப்போது, அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தொடர்ந்து சிகிச்சை நடந்து வரும்நிலையில், கைதான நபரிடமும் விசாரணை தீவிரமாகி உள்ளது. பட்டப்பகலில், தலைநகரில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் பெற்றோர்களை உறைய செய்துள்ளது.