ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு வயதான தம்பதி தற்கொலை.. கர்நாடகாவில் அதிர்ச்சி!

 

பெங்களூருவில் வீட்டு ஜன்னல் கம்பியில் வயதான தம்பதி தூக்கிட்டு இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாவட்டம் பெங்களூரு பனசங்கரி அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தவர் கிருஷ்ணா நாயுடு (84). இவரது மனைவி சரோஜா (74). ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர். பனசங்கரியில் உள்ள இவர்களுக்குச் சொந்தமான இந்த வீட்டின் மற்றொரு தளத்தில் கிருஷ்ணா நாயுடுவின் மகன் அசோக் மற்றும் மருமகள் வசித்து வந்தனர்.

மூன்றாவது மாடியில் கிருஷ்ணா நாயுடு, சரோஜா தனியாக வசித்து வந்தனர். இன்று காலை அவர்களது வீட்டிற்கு நண்பர் வந்திருந்தார். அப்போது ஜன்னல் கம்பியில் கிருஷ்ணா நாயுடு, சரோஜா இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எஃப்எஸ்எல் குழு விரைந்து சென்று தற்கொலை செய்த முதிய தம்பதியினரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அச்சுக்கட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட தம்பதியின் மகன் அசோக், பெற்றோரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு பெற்றோருடன் அசோக் சண்டை போட்டதைப் பார்த்ததாக தம்பதியின் மகள் கூறியுள்ளார். இதுதொடர்பாக அச்சுக்கட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதிய தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.