29வது மாடியில் இருந்து குதித்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை.. கர்நாடகாவில் சோகம்!

 

கர்நாடகாவில் மன உளைச்சல் காரணமாக 7ம் வகுப்பு மாணவி 29வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளத ஹூலிமவு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியர் தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் வசித்து வந்தார். தென்கிழக்கு பெங்களூருவில் வசித்து வந்த இந்த சாப்ட்வேர் எஞ்சனியர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். வீட்டில் இருந்தபடியே பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறார். இவரது மனைவி வீட்டில் உள்ளார். அவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர்களது மகள் மிகவும் விரைவாக எழுந்துள்ளார்.  அப்போது, அந்த சிறுமி அவரது அறைக்கு வெளியே இருந்துள்ளார். அதைக்கண்ட அவரது தாய் ஏன் இவ்வளவு விரைவாக எழுந்துவிட்டாய் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மழுப்பலான பதிலை கூறியுள்ளார். பின்னர், அந்த சிறுமி தனது அறைக்கு சென்றுவிட்டார். இந்த சூழலில், காலை 5 மணியளவில் மிகப்பெரிய சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அதைக்கேட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர் சென்று பார்த்துள்ளார்.

அப்போது, அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்துள்ளார். உடனடியாக அந்த காவலர் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் தங்களது மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த சிறுமியை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். ஆனாலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி சமீப நாட்களாகவே மன உளைச்சலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, சிறுமி தாங்கள் வசிக்கும் 29வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறுமியின் மன உளைச்சலுக்கு என்ன காரணம்? இது தற்கொலை தானா? சிறுமி கால் தவறி விழுந்துவிட்டாரா? அல்லது கொலையா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 7ம் வகுப்பு பயிலும் 12 வயது சிறுமி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.