10-ம் வகுப்பு மாணவி மூச்சுத்திணறி பலி.. நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட போது விபரீதம்!

 

கேரளாவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 10-ம் வகுப்பு மாணவி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோலியக்கோடு பகுதியை சேர்ந்தவர் தாராதாஸ். இவரது மனைவி பினு. இவர்களுடைய மகள் துருபிதா (15). இவர் போத்தன்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே துருபிதா தனது 4-வது வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலையில், அந்த பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி கோவில் குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பிரப்பன்கோடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துருபிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.