10-ம் வகுப்பு மாணவன் பள்ளியின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆசிரியர்கள் கிண்டல் செய்ததால் விபரீதம்!

 

மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் கிண்டல் செய்தலால் 10-ம் வகுப்பு மாணவன் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டம் கஸ்பா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஷேக் ஷான் (16) நேற்று மாலை பள்ளிக்கூடத்தின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அவரை பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவன் ஷேக் ஷானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாணவனின் பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்துள்ளது. மகன் இறப்புச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பள்ளியில் கொடுக்கப்பட்ட ப்ராஜெட் வேலையை ஷேக் ஷான் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆசிரியர் அவரை திட்டியுள்ளார். மேலும் சக மாணவர்கள் முன்பு அவரை கிண்டல் அடித்து அவமானப்படுத்தி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஷேக் ஷான் பள்ளியின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதேவேளை, பாடம் சரியாக படிக்காததால் தன் மகனை இரு ஆசிரியர்கள் கிண்டல் செய்ததாகவும், அதனால் மனமுடைந்து இந்த முடிவு எடுத்துள்ளான் என்றும் ஷேக் ஷானின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தன் மகன் உயிரழப்பிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.