₹10 நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி.. ஆயிரக் கணக்கில் திரண்ட மக்கள்.. பரபரப்பு வீடியோ!

 

புதுச்சேரியில் 10 ரூபாய் நாணயத்துக்கு தனியார் நிறுவனம் முட்டையுடன் பிரியாணி வழங்கியதால், அதை வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் புஸ்சி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் 10 ரூபாய் நாணயம் கடைகள், வணிக நிறுவனங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் செல்லாத நாணயமாக புதுச்சேரி மக்களால் 10 ரூபாய் நாணயம் கருதப்பட்டது.

எனவே தமிழ்நாட்டிற்கு செல்லும் புதுச்சேரி மக்கள் அங்குள்ள வணிக நிறுவனங்கள் வழங்கும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. அப்படியே வாங்கினாலும் அங்கேயே அதை செலவழித்துவிட்டு புதுச்சேரிக்கு வரும் நிலையே நீடிக்கிறது. 10 ரூபாய் நாணயம் செல்லும் என ரிசர்வ் வங்கி முறைப்படி அறிவித்து எச்சரித்தும் புதுச்சேரியில் இவை பெருமளவில் பயன்பாட்டில் இல்லை.

இதனிடையே புதுச்சேரி மக்களால் வாங்க மறுக்கப்படும் 10 ரூபாய் நாணயம் செல்லும் என்பதை வலியுறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர பகுதியிலுள்ள ஒரு தனியார் ஓட்டல் நிர்வாகம் சலுகை அறிவிப்பை வெளியிட்டது. அதாவது காணும் பொங்கல் அன்று 10 ரூபாய் நாணயத்துக்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தது. இதன் காரணமாக புஸ்சி வீதி, பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகிலுள்ள அந்த ஓட்டல் முன்பு இன்று மதியம் 12 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அங்கு கூட்ட நெரிசல் அதிகமாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார், ஓட்டலுக்கு 10 ரூபாய் நாணயத்துடன் வந்தவர்களை வரிசையில் நிற்குமாறு கூறினர். இதனால் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் அணிவகுத்து நின்றனர். 12 மணிக்கு ஓட்டல் நிர்வாகம் ஒருநபரிடம் ஒரு 10 ரூபாய் நாணயத்தை மட்டும் பெற்றுக் கொண்டு ஒரு பிரியாணி பொட்டலத்தை வழங்கியது.